Monday, April 26, 2010

       புதைந்த உண்மைகள்.

பக்தர்கள் பயணம் போன
                      பஸ் ஒன்று மரத்தில் மோதி
பத்துபேர் பலியானார்கள்;
                     பாதிபேர் காண வில்லை;
எட்டுபேர் கவலைக்கிடமாய்
                     இருக்கின்றார் என்ற செய்தி
துக்கத்தை தந்தால் கூட
                     துளைக்குமோர் கேள்வி என்னை.

என்பிள்ளை வாழ வேண்டும்.
                     எனக்கும் (ஓ)ர் வேலை வேண்டும்.
தம்பியைப் படிக்க வைக்கத்
                    தாராள செல்வம் வேண்டும்.
அன்னைக்கு ஆண்டு நுறு
                   ஆயுளும் வேண்டு(ம்) என்று
கும்பிட்டுத்தானே உந்தன்
                    கோயிலைத்தேடி வந்தோம் . . . ?

அன்னையைத் தவிக்க விட்டு
                    ஆற்றோடு சென்று விட்டோம்.
பிள்ளையைத் தவிக்க விட்டுப்
                     பிணமாக மிதந்து விட்டோம்.
இன்னுமா உங்களுக்குப்
                     புத்தியில் உறைக்கவில்லை?
என்கின்ற கேள்வி எந்தான்
                     இதயத்தைக் கிழிக்குதம்மா . . . .!

இதுவொன்றும் புதிய தல்ல
                    எப்போதும் நடப்பதே தான்.
மதிகெட்ட மனித ரெல்லாம்.
                    மறந்துதான் போனோம்; நாங்கள்
துதிக்கின்ற சாமி எங்கள்
                    துயரத்தைக் களைவதற்க்கு
உதிக்கவே இல்லை என்ற
                     உண்மையை மறந்து விட்டோம்.

நம்பிக்கை என்ற பெயரில்
                    நடக்கின்ற தவறை எல்லாம்
கம்மென்று பார்த்துக் கொண்டு
                   கண்மூடி வாழ்வதற்க்கு
பொம்மைகள் நாங்க ளல்ல.
                   பொறுக்கவே முடியா(து)இனிமேல்
கும்பிட்டு விழுவதற்க்குக்
                   கோயில்கள் தேவை இல்லை.

Sunday, April 25, 2010

வேர்க்க விருவிருக்க
விசிரிக்கொண்டிருந்தார் பூசாரி
உணர்ச்சியே இல்லாத
உலோக பொம்மைக்கு.
இயற்கை
புத்திசாலியில்லை
ஏனெனில்
அதற்கு
புத்தியே இல்லை.
புளியமரத்தில் மோதி
தலைகுப்பிற கிடந்தது லாரி
கடவுள் உன்னைக்
காப்பாற்றுவார் - என்ற
இறைவாசகத்தோடு.
"தொழிலதிபர்
குடும்பத்தோடு தற்கொலை"
இதைப் படிக்கும் போதெல்லாம்
மதம்மாறிப்போன
மாடசாமி அண்னன்தான் - என்
நினைவுக்கு வருகிறார்.
உங்கள் அரிப்பு
சொரிந்துகொள்ளாமல்
தீரப்போவதே இல்லை
நீங்கள் வெறுமனே
வேண்டிக்கொண்டே இருங்கள்.
நீ பிரார்த்தனை செய்தும்
நோயாளி மரித்துப்போனால்
உன்னை
உடங்கட்டை ஏற்றுவதில்
தப்பேயில்லை.
பொண்டாட்டியும் புள்ளையுமா
சந்தோஷமா இருக்கும்
சாமிக்கு
என் சோகம்
எப்படிப் புரியும் என்கிறாள்
முதிர்கன்னி.
நீ மெய்ப்பொருள்
என்ற போதுதான்
எனக்கு சந்தேகமே வந்தது
உன் பொய்ப்பொருள் மீது.
சாப்பிட உணவில்லாமல்
பட்டினியால் சாகும்
ஒவ்வெருவனின் சாவுக்கும்
பொறுக்க ஆள்ளற்ற நகரவீதிகளில்
தேங்காய் உடைப்பவர்களே
பொறுப்பாளிகள்.

Saturday, April 24, 2010

  பிள்ளைக்கு அறிவுரை
                                                          14.04.10

கடவுள் இல்லை என்பதை நீயும்
               கண்டுகொள் மகளே!
அடம்பிடிக்கும் சில அறிவற்றோரைத்
               திருந்தச்சொல் மகளே!

ஆதி மனிதன் தீயைப் பார்த்து
               அச்சம் கொண்டதனால் - அதை
ஜோதி என்று சொலிகொண்டு
               வணங்கத்தொடங்கி விட்டான்.

இயற்கை தெய்வம் என்று இருந்த
               மக்கள் பின்னாலே
செயற்கையாக தெய்வங்களையும்
               செய்யத் தொடங்கிவிட்டார்.

பறவை மீன்கள் பாலூட்டிகளையும்
               தெய்வம் என்றார்கள் - பின்
இறந்து போன மனிதரையெல்லாம்
               இறைவ(ன்) ஆக்கி விட்டார்.

பரந்து விரிந்த உலகம் இதனைப்
               படைத்த சக்தியினை
பரம்பொருளென்று சொல்லுவதாலே
               பாதகம் இல்லை யென்றார்.

சரிதான் ஆனால் சாட்சியமில்லை
               சரித்திரம் வேறம்மா. - இதை
அறிஞர் டார்வின் அன்றே நமக்கு
               அடித்துச் சொல்லி விட்டார்.

குறங்கிலிருந்து பிறந்தோம் ஆனால்
               குணத்தில் மாற்றமில்லை
மரத்தில் இருந்து இறங்கி வந்து
               மதத்தில் ஏறிவிட்டோம்.

அடிதடி சண்டை ஆர்ப்பாட்டங்கள்
               அனைத்தும் ஏனம்மா? - சிறு
கடுகளவுக்கு பயனில்லாத
               கடவுளால் தானம்மா.

இனியொரு உலகம் அமைப்போம் அதிலே
               இறைவன் தேவையில்லை. - சக
மனிதனை மதிப்போம், மனிதனாய் வாழ்வோம்
               மதங்களும் தேவையில்லை.
  
To view the video of this poem  CLICK HEAR



                       மகளைப் பழக்கு               
                                                              15-04-10

மாயக் கடவுளை மனிதன் நம்புதல்
                    நியாயம் இல்லையடி - அட
காயம் பட்டவன் கடவுள் தொட்டு
                    ஆறுவதில்லை யடி.

அந்தக் கால கடவுளை நம்பி
                    அறிவை இழக்காதே - உன்
சந்ததியாவது சுகமடையட்டும்
                    சாமியைப் பழக்காதே.

விதையாய் மனதில் விழுந்தால் போதும்
                    விசமாய் மாறிவிடும். - பின்
புதைகுழிக்குள்ளே போகிற வரையில்
                    புத்தி கெடுத்துவிடும்.

சரித்திரம் பேசு சமத்துவம் பேசு
                    சந்திர மண்டலத்தை
விரித்து விளக்கு விடுகதை போடு
                    விடைகள் தேடவிடு.

இயற்கையின் அழகைக் கண்டு ரசிக்கும்
                    இயல்பைப் பழக்கிவிடு. - உடல்
வியற்கிற வரையில் துள்ளிக் குதித்து
                    விளையாட விட்டுவிடு.

மரங்களின் தேவையை மலைகளின் தேவையை
                    மகளுக்குச் சொல்லிக்கொடு - அவள்
கரங்களில் விதையை அள்ளிக் கொடுத்துக்
                    காடு வளர்த்துவிடு.

மதங்களின் பெயரால் மக்கள் பிரிந்ததை
                    மகளுக்குச் சொல்லிக்கொடு - அந்த
இதயங்களை இனி இணைக்கிற பொறுப்பை
                    இவளுக்கு விட்டுவிடு.

To watch the video of this poem