மகளைப் பழக்கு
15-04-10
15-04-10
மாயக் கடவுளை மனிதன் நம்புதல்
நியாயம் இல்லையடி - அட
காயம் பட்டவன் கடவுள் தொட்டு
ஆறுவதில்லை யடி.
அந்தக் கால கடவுளை நம்பி
அறிவை இழக்காதே - உன்
சந்ததியாவது சுகமடையட்டும்
சாமியைப் பழக்காதே.
விதையாய் மனதில் விழுந்தால் போதும்
விசமாய் மாறிவிடும். - பின்
புதைகுழிக்குள்ளே போகிற வரையில்
புத்தி கெடுத்துவிடும்.
சரித்திரம் பேசு சமத்துவம் பேசு
சந்திர மண்டலத்தை
விரித்து விளக்கு விடுகதை போடு
விடைகள் தேடவிடு.
இயற்கையின் அழகைக் கண்டு ரசிக்கும்
இயல்பைப் பழக்கிவிடு. - உடல்
வியற்கிற வரையில் துள்ளிக் குதித்து
விளையாட விட்டுவிடு.
மரங்களின் தேவையை மலைகளின் தேவையை
மகளுக்குச் சொல்லிக்கொடு - அவள்
கரங்களில் விதையை அள்ளிக் கொடுத்துக்
காடு வளர்த்துவிடு.
மதங்களின் பெயரால் மக்கள் பிரிந்ததை
மகளுக்குச் சொல்லிக்கொடு - அந்த
இதயங்களை இனி இணைக்கிற பொறுப்பை
இவளுக்கு விட்டுவிடு.
To watch the video of this poem

2 comments:
its awesome
nice pa...
Post a Comment