Saturday, April 24, 2010

                       மகளைப் பழக்கு               
                                                              15-04-10

மாயக் கடவுளை மனிதன் நம்புதல்
                    நியாயம் இல்லையடி - அட
காயம் பட்டவன் கடவுள் தொட்டு
                    ஆறுவதில்லை யடி.

அந்தக் கால கடவுளை நம்பி
                    அறிவை இழக்காதே - உன்
சந்ததியாவது சுகமடையட்டும்
                    சாமியைப் பழக்காதே.

விதையாய் மனதில் விழுந்தால் போதும்
                    விசமாய் மாறிவிடும். - பின்
புதைகுழிக்குள்ளே போகிற வரையில்
                    புத்தி கெடுத்துவிடும்.

சரித்திரம் பேசு சமத்துவம் பேசு
                    சந்திர மண்டலத்தை
விரித்து விளக்கு விடுகதை போடு
                    விடைகள் தேடவிடு.

இயற்கையின் அழகைக் கண்டு ரசிக்கும்
                    இயல்பைப் பழக்கிவிடு. - உடல்
வியற்கிற வரையில் துள்ளிக் குதித்து
                    விளையாட விட்டுவிடு.

மரங்களின் தேவையை மலைகளின் தேவையை
                    மகளுக்குச் சொல்லிக்கொடு - அவள்
கரங்களில் விதையை அள்ளிக் கொடுத்துக்
                    காடு வளர்த்துவிடு.

மதங்களின் பெயரால் மக்கள் பிரிந்ததை
                    மகளுக்குச் சொல்லிக்கொடு - அந்த
இதயங்களை இனி இணைக்கிற பொறுப்பை
                    இவளுக்கு விட்டுவிடு.

To watch the video of this poem


2 comments:

msn said...

its awesome

Anonymous said...

nice pa...